அறிவோம் அஞ்சல்தலை
– மங்களூர் ஸ்ரீதர்

அஞ்சல்தலை சேகரிக்கும் கலையை கடந்த 25 வருடங்களாக மேற்கொண்டு வருகிறேன். 2016-ம் வருடம் மே மாதம் THE HINDU நாளிதழில் நற்றிணை இணைய வானொலி பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. உடனடியாக நற்றிணை இணைய வானொலியை செவிமடுத்தேன். அதில் ஒலித்துக் கொண்டிருந்த கருத்துக்களை மிகவும் ரசித்தேன். உடனடியாக திரு.ஞானப்பிரியன் அவர்களைத் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த தமிழ்ப் பணிக்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அடுத்தடுத்து தொடர்ந்த எங்களது அலைபேசி உரையாடலில் எனது அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த தகவல்களையும் பரிமாறினேன். அஞ்சல்தலைகள் குறித்த பல வரலாற்றுத் தகவல்களை உலகத் தமிழர்களுக்கு நற்றிணை மூலமாக எடுத்துக் கூறுமாறு ஞானப்பிரியன் அவர்கள் ஆலோசனை கூறவே உடனடியாக சம்மதித்து வாரம் ஒரு நாள் வழங்குவதாக ஒத்துக் கொண்டேன்.அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு புதன்கிழமையும் “அறிவோம் அஞ்சல் தலை” என்ற தலைப்பில் அஞ்சல் தலை தொடர்பான தகவல்களை ஒலிவடிவாக அளித்து வருகிறேன். இந்த நிகழ்ச்சி மூலமாக என்னை நானே தெளிவுபடுத்திக் கொள்கிறேன். சரியான தகவல்களை நேயர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். அஞ்சல் தலை உருவான வரலாற்றிலிருந்து துவங்கி அஞ்சல் தலையின் பயணத்தோடு சேர்ந்து நானும் பயணிக்கிறேன். உலகத் தமிழர்களுக்கு அரிய பொக்கிஷமாக தொகுத்துத் தரும் நற்றிணையை எத்தனை பாராட்டினாலும் தகும். இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ள பதிவுகளைக் கேட்டுப் பயன்பெறுங்கள். இதுகுறித்த தங்கள் கருத்துக்களை Comments பகுதியில் பதிவு செய்யுங்கள். தங்கள் நண்பர்கள் பயன்பெற Share செய்யுங்கள்.
என்றும் அன்புடன்
ஸ்ரீதர், மங்களூர்
Cell: 99011 88536
E-mail : krishnaraosridhar@yahoo.com
Facebook : krishnaraosridhar@yahoo.com
Lighthouse Stamp Blog : http://ksbeacon.blogspot.com



Leave A Comment
You must be logged in to post a comment.